மழையின் வழியே
இரவு பெய்து கொண்டிருந்த
அந்த விசித்திர நாளில்தான்
நம் முதல் சந்திப்பு நிகழ்ந்தது
அந்த இரவின்
சில துளிகளை
என் வீட்டு மீன் தொட்டியில்
சேமித்து வைத்திருக்கிறேன்
நம் அடுத்த சந்திப்பின் போது
உனக்கு பரிசளிப்பதற்காக
அதற்கு முன்
நீ
இரவை பார்த்து
பயப்படுவதை நிறுத்தி விடு
பகலை விடவும்
இரவு கருணை மிக்கது
நமக்கு நாம் சொந்தமாகும் ஓர் இரவில்
உன்னிடம் சொல்வதற்கென்று
என்னிடம் ஒரு ரகசியமுண்டு
முன்பொரு சமயம்
கடவுளின் அதிகாரத்திற்கு
கட்டுப்பட மறுத்த
அந்த தேவதூதன் நான்தான் .
நண்பா கவிதை அருமை, மெல்லிய சர்ரியலிச வாசனையுடன்.
ReplyDeleteதங்களுக்கு நேரமிருப்பின் என் வலைப்பூவிற்கு வருகை தாருங்கள்.