Tuesday, June 15, 2010

மழையின் வழியே இரவு பெய்து கொண்டிருந்தது

மழையின் வழியே
இரவு பெய்து கொண்டிருந்த
அந்த விசித்திர நாளில்தான்
நம் முதல் சந்திப்பு நிகழ்ந்தது

அந்த இரவின்
சில துளிகளை
என் வீட்டு மீன் தொட்டியில்
சேமித்து வைத்திருக்கிறேன்
நம் அடுத்த சந்திப்பின் போது
உனக்கு பரிசளிப்பதற்காக

அதற்கு முன்
நீ
இரவை பார்த்து
பயப்படுவதை நிறுத்தி விடு
பகலை விடவும்
இரவு கருணை மிக்கது
நமக்கு நாம் சொந்தமாகும் ஓர் இரவில்
உன்னிடம் சொல்வதற்கென்று
என்னிடம் ஒரு ரகசியமுண்டு

முன்பொரு சமயம்
கடவுளின் அதிகாரத்திற்கு
கட்டுப்பட மறுத்த
அந்த தேவதூதன் நான்தான் .

Monday, June 14, 2010

இரகசியம்

ஒரு நண்பகலின்
ஆழ்ந்த மௌனத்தில்
உணர்ந்தேன் .
பிரபஞ்ச இரகசியங்களின்
திறவுகோல் ,
காலடியில் மிதிபட்டு
காய்ந்த சருகுகள்
ஏற்படுத்தும் ஓசைக்கும்
நிசப்ததிற்கும்
இடையில்
ஒளித்து வைக்கப்பட்டிருப்பதை .

Thursday, June 10, 2010

தேடல் அவசியமானது வாழ்க்கை அவசியமற்றது

இரவின் மடியில்
தவழும் என் தனிமை
உருகும் மெழுகில்
உதிரும் என் கண்ணீர்
ஒரு கணத்தின் முறிவில்
பிறக்கும் கவிதையில்
நிறையும் என் ஆன்மா
கருகும் பூவிதழுக்கும்
கடைசி உயிர்ப்புக்கும்
உள்ள இடைவெளி
என் ஆயுள்
ஆதலால்
என் தேடல் அவசியமானது
இந்த வாழ்க்கை அவசியமற்றது .

Thursday, June 3, 2010

முதல் முத்தம்

ஒற்றை மரத்தின் மறைவில்
உதடுகள் துடிக்க
உடல் நடுங்க
பரிமாறிக் கொள்ளப்பட்ட
முதல் முத்தத்திற்கு
சாட்சியாய்
பெருகி ஓடி
மண்ணில் வீழ்ந்த
வியர்வைத் துளியின்
ஈரம் காயுமுன்
முறிந்து போனது
முதல் காதல்
அவ்விடத்தை கடக்கும் போதெல்லாம்
வீசுகிறது
வியர்வை கலந்த
முத்தத்தின் வாசம்

Tuesday, June 1, 2010

அபத்த கவிதை - 3

சாளரத்தின் வழியே
சூரியனின் ஒளிக்கரங்கள்
நீள்கின்றன
கழுவப்படாத தேநீர் கோப்பையை
எறும்புகள் மொய்த்துக் கொண்டிருக்கின்றன.
படுக்கை விரிப்பு கலைந்து கிடக்கிறது.
வாசிக்கப் படாத புத்தகங்கள்
அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன
இவற்றைப் பற்றிய
பிரக்ஞய் இல்லாமல்
மின் விசிறியில் தொங்கிக்கொண்டிருக்கிறது
என் உடல்.